‘தேசிய கீதத்திற்கு கண்ணீர் விட்ட சிராஜ்’- தோனியின் வார்த்தைகளை கூறி ஆறுதல் அளித்த ஜாஃபர்!

Update: 2021-01-07 06:21 GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்கள் தங்கள் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக களத்தில் அணிவகுத்து நின்றனர். அப்போது இந்திய அணியின் இளம் வீரர் முகமது சிராஜ் இந்திய தேசிய கீதம் இசைத்து கொண்டிருந்தப் போது கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த வீடியோ சமூகவலைத் தளத்தி மிகவும் வைரலானது. தன் தாய் நாட்டிற்காக போட்டியில் களமிறங்கும் விளையாட்டு வீரர் தேசிய கீதம் இசைக்கப்படும் போது சற்று உணர்ச்சி போங்கும் வகையில் இருப்பார். சிராஜும் தனது உணர்ச்சியை கண்ணீர் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனைப் பார்த்த பலரும் சிராஜை ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் சிராஜின் செயலை பதிவிட்டு ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ‘நீங்கள் ரசிகர்களுக்காக விளையாடுவதில்லை; நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதில் ‘நீங்கள் ரசிகர்களுக்காக விளையாடுவதில்லை...’ என்னும் வாசகத்தை முன்னாள் கேப்டன் தோனி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது கூறியிருந்தார். இந்த வாசகத்தை தற்போது வாசிம் ஜாஃபர் எடுத்து சிராஜை பாராட்டியுள்ளார். சிராஜ் ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு தனது முதல் டி20 போட்டியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தாய் நாட்டிற்காக களமிறங்கும் உணர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடருக்கு முன்பாக சிராஜின் தந்தை மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: டிராவிட்டிற்கு பிறகு ஆஸி. மண்ணில் வெற்றி ரன்னை அடித்த ரஹானே!