புரோ லீக் ஹாக்கி:ஆஸி.க்கு எதிரான இரண்டாவது போட்டி டிரா; ஷூட் அவுட் வெற்றியால் இந்தியாவிற்கு போனஸ் புள்ளி

Update: 2020-02-22 16:49 GMT

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பான எஃப்..ஹெச் சார்பில் புரோ லீக் என்ற தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான புரோ லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய அணி பங்கேற்று உள்ளது.

இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும் மற்றொரு போட்டியில் டிராவும் செய்தது. இதனையடுத்து பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4-3 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தின் முதல் கால் பாதியில் இரு அணியின் வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்க வில்லை. எனவே முதல் கால் பாதியின் முடியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்டன் முதல் கோலை அடித்தார். எனினும் 25ஆவது நிமிடத்தில் ருபீந்திர சிங்கும் 27ஆவது நிமிடத்தில் ஹர்மபிரீத் இச்ங்கும் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தனர். இதனால் முதல் பாதியின் இறுதியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

மூன்றாவது கால் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்தக் கால் பாதியில் குறிப்பாக ஆஸ்திரேலிய அணி கிடைத்த பெனால்டி ஸ்டோர்க் வாய்ப்பையும் வீணடித்தது. இதனைத் தொடர்ந்து கடைசி கால் பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் செலூஸ்கி கோல் அடித்து சமன் செய்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என சமனில் இருந்தன.

பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. எனவே இறுதியில் 2-2 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து போனஸ் புள்ளிகளை யார் பெறுவார்கள் என்பதை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கையாளப்பட்டது. இதில் 3-1 என்று இந்திய அணி வெற்றிப் பெற்றது. இதன்மூலம் இந்திய அணி போனஸ் புள்ளிகளை பெற்றது.

இந்திய அணி புரோ லீக் தொடரில் அடுத்து ஏப்ரல் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெறும் போட்டியில் ஜெர்மனியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.