‘காபாவிலிருந்து வணக்கம்’- பெயினுக்கு அஸ்வின் கொடுத்த பதிலடி !

Update: 2021-01-19 09:45 GMT

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாதனை புரிந்தது. பிரிஸ்பேன் மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர் அஸ்வினை கலாய்த்தார். அந்தப் போட்டியில் அஸ்வின் மற்றும் விஹாரி சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தனர். அந்த சமயத்தில் அஸ்வினிடம் பேசிய பெயின், “உங்களை விரைவில் காபாவில் சந்திக்கிறேன்” எனக் கூறியிருந்தார். இதற்கு அஸ்வின் அப்போதே சில வார்த்தைகள் மூலம் பதிலடி கொடுத்தார்.

இந்தச் சூழலில் தற்போது காபாவில் இந்திய அணி வெற்றிப் பெற்றவுடன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “காபாவிலிருந்து மாலை வணக்கம். நான் இந்தப் போட்டியில் விளையாடததற்கு வருந்துகிறேன். எனினும் எங்களுடன் கொரோனா காலத்தில் டெஸ்ட் தொடரில் விளையாடியதற்கு மிக்க நன்றி. இந்தத் தொடரை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல அஸ்வினின் மனைவி ப்ரித்தி அஸ்வினும் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்போது பெயின் கூறிய “சி யூ அட் த காபா மேட்” என்ற வாசகத்தை தற்போது பதிவிட்டுள்ளார். இவரின் பதிவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தந்தை இறப்பு, இனவெறி தாக்குதல் டூ 5 விக்கெட்- முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!