ஃபெட் கோப்பை டென்னிஸ் 2020: கொரிய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி

Update: 2020-03-06 05:44 GMT

துபாயில் நடந்து வரும் இந்த போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொரியாவினை எதிர்கொண்டது இந்தியா. வழக்கம்போல் முதல் ஆட்டத்தில் களமிறங்கிய ருதுஜா போஸ்லே, எஸ் ஜே ஜாங்கினை எதிர்கொண்டார். நேற்றைய கடின வெற்றி தந்த புத்துணர்ச்சியில் விளையாடிய ருதுஜா 7-5, 6-4 என்ற கணக்கில் தரவரிசையில் தன்னை விட பலமடங்கு முன்னிலையில் இருக்கும் ஜாங்கினை எளிதாக வீழ்த்தினார். இந்த டய்யின் அடுத்த ஆட்டத்தில் இந்தியாவிற்காக களமிறங்கினார் முன்னனி வீராங்கனை அங்கிதா ரெய்னா. நிச்சயம் வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் ஆட்டத்தின் முடிவில் நா லேய்யிடம் 4-6, 0-6 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.

இதனால் டய்யினை எந்த அணி வெல்லும் என்பதை தீர்மானிக்கும் போட்டியானது இரட்டையர் போட்டி. இதில் இந்திய அணிக்காக அங்கிதா ரெய்னாவுடன் களமிறங்கினார் அனுபவமிக்க சானியா மிர்சா. ஒற்றையர் போட்டியில் தோற்றிருந்தாலும், இரட்டையர் ஆட்டத்தினை சிறப்பாக தொடங்கினார் அங்கிதா. அவருக்கு பக்கபலமாக சானியா விளையாட, ஆட்டத்தின் முடிவில் நா லே, நா ரே ஜோடியினை 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று இந்த டய்யினை கைப்பற்றினர். இந்த மூலம் தங்களது க்ருப்பில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.