ஃபெட் கோப்பை டென்னிஸ் 2020: சைனீஸ் தைபே அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பினை தக்கவைத்துகொண்ட இந்திய அணி

Update: 2020-03-07 03:55 GMT

துபாயில் நடந்து வரும் போட்டியில், இந்திய மகளிர் அணி தனது முதல் டையில் சைனாவிடம் தோல்வியடைந்திருந்தாலும் அடுத்தடுத்த டைகளில் சிறப்பாக விளையாடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கொரிய அணிகளை வீழ்த்தி தனது க்ருப்பில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினர். ப்ளே ஆப்ஸ் வாய்ப்பினை அதிகப்படுத்த இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சைனீஸ் தைபே அணியை எதிர்கொண்டது இந்திய அணி. மற்ற டைகளைப் போல இந்த முறையும் இந்தியாவிற்காக முதல் ஆட்டத்தில் களமிறங்கினார் ருதுஜா போஸ்லே. கடந்த டையில் பெற்ற கடின வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த அவர், 15 வயதே ஆன யாங் யா யினை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ருதுஜா முதல் செட்டினை 6-3 என கைப்பற்ற, அடுத்த செட்டில் பதிலடி கொடுத்து 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் யாங். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் கடுமையாக போராட இறுதி செட் டை பிரக்கர் வரை சென்றது. இதில் யாங்கின் 3 மேட்ச் பாயிண்ட்களை தடுத்து தனக்கு கிடைத்த இரண்டாவது மேட்ச் பாயிண்ட்டினை வென்று, மிக கடுமையான போராட்டத்திற்கு பின் 3-6, 6-3, 7(8)-6 என்ற கணக்கில் வெற்றிபெற்றார் ருதுஜா போஸ்லே.

இரண்டாவது போட்டியை வென்றால் டையினை கைப்பற்றிவிடலாம் என்ற நிலையில் சைனீஸ் தைபேயின் என் ஷுவோ லியாங்கினை எதிர்கொண்டர் இந்தியாவின் முன்னனி வீராங்கனை அங்கிதா ரெய்னா. கடந்த டையின் ஒற்றையர் ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்த இந்த ஆட்டத்தை சிறப்பாக தொடங்கி முதல் செட்டினை 6-3 என்ற கணக்கில் சிரமமின்றி கைப்பற்றினார். ஆனால் அதன்பின் சுதாரித்து சிறப்பாக ஆடிய லியாங் அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றினார். இதன்மூலம் இந்த ஆட்டத்தில் 6-3, 2-6, 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார் அங்கிதா ரெய்னா.

இதனால் மீண்டுமொருமுறை டையினை எந்த அணி வெல்லும் என்பதை தீர்மானிக்கும் போட்டியானது இரட்டையர் போட்டி. இதில் இந்திய அணிக்காக வெற்றி ஜோடியான அங்கிதா ரெய்னா மற்றும் சானியா மிர்சா ஆகியோர் களமிறங்கினர். லத்திஷா சான் மற்றும் என் ஷுவோ லியாங் ஜோடியை எதிர்த்து விளையாடிய அவர்கள், விறுவிறுப்பாக சென்ற முதல் செட்டினை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினர். இரு ஜோடிகளும் கடுமையாக போராட இரண்டாவது செட்டும் பரபரப்பாக சென்றுது. இதனை 6-4 என்ற கணக்கில் சைனீஸ் தைபே அணி கைப்பற்றியது. இதனால் வெற்றியை நிர்ணயம் செய்யும் கடைசி செட்டில் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து இந்திய அணிக்கு, தனது பல வருட அனுபவம் மூலமாக வெற்றியை பெற்று தந்தார் சானியா. ஆட்டத்தின் முடிவில் சானியா மிர்சா மற்றும் அங்கிதா ரெய்னா ஜோடி 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று தங்களது க்ருப்பில் இரண்டாவது இடத்தை இந்திய அணி தக்கவைத்து கொள்ள உதவினர். இன்று நடக்கும் ஃபெட் கோப்பை தொடரின் தங்களது கடைசி டையில் இந்தோனேசிய அணியினை எதிர்கொள்ளும் இந்திய அணி, இதில் வெற்றிபெற்றால் உலக ப்ளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.