மகளிர் கால்பந்து லீக் - நடப்பு சாம்பியன் சேது எஃப்.சி அணிக்கு முதல் தோல்வி

Update: 2020-01-28 17:56 GMT

மகளிருக்கான கால்பந்து லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில்

நடப்பு சாம்பியனான தமிழ்நாட்டைச் சேர்ந்த சேது எஃப்.சி, க்ரிப்ஷா எஃப்.சி அணிகள்

மோதின.

பெங்களூரு கால்பந்து மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், க்ரிப்ஷா அணியின்

ரத்தன்பாலா அதிரடியாக இரண்டு கோல்கள் அடித்தார். போட்டி தொடங்கி முதல் பாதி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காமல்

இருந்தனர். கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில், ரத்தன்பாலா

முதல் கோல் அடித்தார்.

இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சிறப்பாக விளையாடினாலும், போட்டியின் 60-வது நிமிடத்தில் கிர்ப்ஷா அணி மற்றுமொரு கோல் அடித்தது. இதனால், 2-0 என முன்னிலை வகித்து வந்த க்ரிப்ஷா எஃப்.சி, போட்டியையும் வென்றது

அடுத்து, ஜனவரி 30-ம் தேதி நடக்கும் போட்டியில் சேது எஃப்.சி அணி பி.பி.கே டி.ஏ.வி கால்பந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. ஜனவரி மாதம் தொடங்கிய மகளிர் கால்பந்து லீக், பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா, மணிப்பூர், குஜராத், ஒரிஸா, கோவா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல அணிகள் இத்தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த சேது எஃப்.சி அணி – மணிப்பூர் போலீஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் சேது எஃப்.சி அணி அதிரடியாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆண்டு தொடருக்கு, தமிழகத்தில் இருந்து தேர்வாகியிருக்கும் ஒரே அணி இது! கடந்த ஆண்டு போல, இம்முறையும் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம் பிடித்துள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதியில் போட்டியிடும்.