பள்ளியின் கழிப்பறையை சீரமைத்து அசத்திய சின்ன ‘தல’ ரெய்னா

Update: 2020-10-14 06:58 GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது சொந்த காரணங்களுக்காக சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா விலகினார். அவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருந்தார். இதனால் இவர் ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென வெளியேறியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையை தனது அறக்கட்டளை மூலம் ரெய்னா சீரமைத்து அசத்தியுள்ளார். இதுதொடர்பாக ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ரெய்னா நேற்று ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், “காசியபாத் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியின் கழிப்பறை சீரமைக்கப்பட்டுள்ளது. ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு தனியாக கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன் சில வகுப்புகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை கார்சியா அறக்கட்டளை மற்றும் யுவா அமைப்பு சேர்ந்து செய்துள்ளது. இந்த வேலை இணைந்து முடிந்த இரு அமைப்புகளுக்கு எனது நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

ரெய்னாவின் இந்தப் பதிவிற்கு பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் பதில் ட்வீட் செய்துள்ளார். அதில், “நீங்கள் எப்போதும் ஒரு கடின உழைப்பாளி. உங்களுடைய கார்சியா அறக்கட்டளை மூலம் சமூகத்தில் மாற்றம் செய்ய முயற்சிப்பதற்கு எனது வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னாவின் மகள் பெயர் கார்சியா. தனது மகளின் பெயரில் சுரேஷ் ரெய்னா ஒரு கட்டளையை வைத்து உதவிகளை செய்து வருகிறார். சுரேஷ் ரெய்னாவின் இந்தச் செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தோனி விக்கெட்டை எடுத்து தனது கனவை நினைவாக்கிய நடராஜனை பாராட்டிய அஸ்வின்