2020-21 சீசனில் விளையாடவுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டது சென்னையின் எப் சி

Update: 2020-08-22 11:51 GMT

சமீபகாலமாக சிறிது சோகத்தில் இருந்தனர் சென்னையின் எப் சி அணியின் ரசிகர்கள். காரணம்? கடந்த சீசனின் மேனேஜர் ஓவன் காயல் மற்றும் கடந்த சீசனின் கோல்டன் பூட் வெற்றியாளர் நேர்கா வால்ஸ்கிஸ் ஆகியோர் ஜாம்ஷெட்பூர் அணியில் இணைந்தது தான். அதோடு மட்டுமல்லாமல் சென்னையின் எப் சி அணியும் எந்த புதிய வீரரை பற்றி அறிவிக்காததும் தான்.

ஆனால் தற்போது சென்னையின் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். முதலில் அணியின் மூத்த டிஃபென்டர் எலி சபியா அடுத்த சீசனில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டினை சேர்ந்த இவர் நான்காவது ஆண்டாக அணிக்கு விளையாடயிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து அணியின் நட்சத்திர வீரரான ரபெல் கிரிவெல்லாரோ அடுத்த சீசனில் விளையாடுவார் என உறுதிசெய்யப்பட்ட அறிவிப்பு வெளியானது. பிரேசிலை சேர்ந்த இவர் கடந்த சீசனில் சென்னையின் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முக்கிய காரணமாகும்‌.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வந்துள்ளது கடைசி அறிவிப்பு. அனைவரின் செல்ல பிள்ளையான அனிருத் தாபா சென்னையின் எப் சி அணிக்கு தொடர்ந்து விளையாடுவார் என்பதே அந்த அறிவிப்பாகும். மிட்பீல்டாரன அவர் 2016ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்த சீசன் சென்னையின் அணியுடன் அவர் விளையாடும் ஐந்தாவது ஆண்டாகும். மேலும் அடுத்த சீசனில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியலிலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தனபால் கணேஷ், எட்வின் சிட்னி வான்ஸ்பால், சீனிவாசன் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் விஷால் கைத், நோய் சிங், ஜெர்ரி லால்ரின்சுவாலா, லாலியன்சுவாலா ச்சாங்டே, தீபக் தாங்ரி, ரஹீம் அலி, அபிஜித் சர்கார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

[embed]https://twitter.com/ChennaiyinFC/status/1296334134558646272[/embed]

அடுத்த ஆண்டிற்கான ஐ எஸ் எல் தொடர் கோவாவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளும் மூன்று மைதானங்களில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.