பிக்பேஷ் டி20 தொடரில் கலக்கும் இந்திய வம்சாவளி வீரர்கள்!

Update: 2021-01-08 02:26 GMT

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் ஆண்டு தோறும் பிக்பேஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மெல்பேர்ன், சிட்னி, பெர்த் உள்ளிட்ட அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்தாண்டிற்கான தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

நடப்புத் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இத்தொடரில் வழக்கத்திற்கு மாறாக சிட்னி அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த அணியில் இடம்பெற்றுள்ள இளம் பந்துவீச்சாளர்களான சங்கா மற்றும் நாயர். இவர்கள் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள் என்பது மிகப் பெரிய ஆச்சரியமான ஒன்று.

19வயதான தன்வீர் சங்கா முதல் முறையாக பிக்பேஷ் தொடரில் களமிறங்கியுள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கினார். இந்தத் தொடரில் இவர் தனது சுழற்பந்து வீச்சின் மூலம் 15 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதேபோல தற்போது நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரிலும் இவர் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் பட்டியலில் முதலிட்டத்தில் உள்ளார்.

இவரின் தந்தை ஜோகா சங்கா பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர். ஜோகா சங்கா 1997ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு அவர் டாக்ஸி டிரைவர் வேலையை செய்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் இவருக்கு திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். இவருடைய மகனான தன்வீர் சங்கா ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்று ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

தன்வீர் சங்காவை போல் சிட்னி அணியின் மற்றொரு இந்திய வம்சாவளி வீரர் அர்ஜூன் நாயர். இவருடைய தந்தை ஜெயானந்த் நாயர் 1996ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு பணி காரணமாக குடிபெயர்ந்துள்ளார். அங்கு அவர் சிட்னி நகரில் வசித்து வந்துள்ளார். அவருக்கு 1998ஆம் ஆண்டு அர்ஜூன் நாயர் என்ற மகன் பிறந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பிறந்த அர்ஜூன் நாயர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்று அங்கு படித்து வந்துள்ளார்.

அர்ஜூன் நாயர் பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சில் சிறந்து விளங்கியதன் மூலம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்து கொண்ட இவர் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். தற்போது இவர் சங்காவுடன் சேர்ந்து சுழல் கூட்டணியில் கலக்கி வருகிறார். ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ஏற்கெனவே குரிந்தர் சந்து என்ற இந்திய வம்சாவளி வீரர் 2015ஆம் ஆண்டு களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘தேசிய கீதத்திற்கு கண்ணீர் விட்ட சிராஜ்’- தோனியின் வார்த்தைகளை கூறி ஆறுதல் அளித்த ஜாஃபர்!