திடீரென மனதை மாற்றிய பி.வி.சிந்து உபர் கோப்பையில் பங்கேற்பு - காரணம் என்ன?

Update: 2020-09-09 02:20 GMT

இந்திய பேட்மிண்டனின் சாம்பியன் வீராங்கனையான பி.வி.சிந்து அடுத்த மாதம் நடைபெற இருந்த உபர் கோப்பையிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தொடரில் பங்கேற்க போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென அந்த முடிவை மாற்றியுள்ளார். பி.வி.சிந்து அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்கும் உபர் கோப்பையில் பங்கேற்க போவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் ஹிமந்தா பிஸ்வா சிந்துவிடம் பங்கேற்குமாறு முறையிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிமந்தா பிஸ்வா, “இந்திய அணிக்கு உபர் கோப்பையில் பதக்க வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இதனால் பி.வி.சிந்துவை பங்கேற்குமாறு வலியுறுத்தினேன். அதனை ஏற்று கொண்ட அவர் தனது வீட்டின் பூஜையை முன்கூட்டியே நடத்தி முடித்துவிட்டு உபர் கோப்பையில் பங்கேற்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.

அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்கும் உபர் கோப்பை தொடரில் தாய்லாந்து,சீன தைபே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க போவதில்லை எனத் தெரிவித்துள்ளன. மேலும் சீனா மற்றும் தென் கொரிய அணிகள் பங்கேற்பது குறித்து இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.

உபர் கோப்பை மற்றும் தாமஸ் கோப்பைக்கான இந்திய அணிகள் வரும் 17ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமஸ் மற்றும் உபர் கோப்பை போட்டிகள் இந்தாண்டு டென்மார்கில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஜுவாலா குட்டாவுடன் நிச்சயதார்த்தம் செய்த நடிகர் விஷ்ணு விஷால்