மீண்டும் பயிற்சிக்கு திரும்பிய சிந்து, சாய் பிரணீத் ! -வீடியோ

Update: 2020-08-07 14:50 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்து, சாய் பிரணீத் உள்ளிட்டவர்கள் மீண்டும் பயிற்சியில் களமிறங்கி உள்ளனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து மீண்டும் பயிற்சியை தொடங்க இந்திய பேட்மிண்டன் சங்கம் முடிவு எடுத்தது. அதன்படி முதலாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ள வீரர்களுக்கு மட்டும் பயிற்சி ஆரம்பிக்க திட்டமிட்டது. இதற்காக தெலங்கானா அரசிடம் ஹைதராபாத்தில் பயிற்சி பெற அனுமதி கோரி இருந்தது. தெலங்கானா அரசு கடந்த 1ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்தது.

இந்தச் சூழலில் இவர்கள் அனைவரும் ஹைதராபாத்திலுள்ள கோபிசந்த் அகடாமியில் மீண்டும் இன்று பயிற்சியை தொடங்கினர். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தனது உடற்பயிற்சியாளருடன் பயிற்சி செய்யும் நிழற்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை அவர் பயிற்சியாளர் கோபி சந்த் மற்றும் கொரிய பயிற்சியாளர் ஆகியோருடன் பயிற்சியில் ஈடுபட்டார். இவரைத் தொடர்ந்து மற்றொரு நட்சத்திர வீரரான சாய் பிரணீத் பயிற்சி மேற்கொண்டார்.

இது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் தனது பயிற்சியை இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு பேட்மிண்டன் வீரர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.