இந்தியா-ஆஸி. டெஸ்ட்: வேகப்பந்துவீசிய ரோகித் சர்மாவை கலாய்த்த தினேஷ் கார்த்திக் !

Update: 2021-01-15 10:49 GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் நவதீப் செய்னி தனது 8ஆவது ஓவரை வீசிக் கொண்டிருந்த போது காயம் அடைந்தார். இதனால் அவர் தனது ஓவரை முடிக்காமல் பாதியிலேயே மைதானத்திலிருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அவருடைய ஓவரை முடிக்க ரோகித் சர்மா முன்வந்தார். எப்போதும் சுழற்பந்துவீசும் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளராக மாறி பந்துவீசினார்.

இதுதொடர்பான வீடியோவை ஐசிசியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதனைப் பார்த்து பலரும் தங்கள் கருத்துகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய வீரரும் தமிழ்கத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி நீங்கள் இருவரும் கவனமாக இருங்கள் புதிய வேகப்பந்து வீச்சாளர் ரோகித் சர்மா வந்துள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் சேர்த்து மிகவும் வேகமாக ஒருவர் ஓடுவது போல ஒரு படத்தையும் இவர் பதிவிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சிரித்து தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக இன்றைய போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருக்கும் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். 44 நாட்களுக்குள் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக களமிறங்கி நடராஜன் அசத்தியுள்ளார். அத்துடன் ஒரே தொடரில் அனைத்துவித மான போட்டிகளிலும் அறிமுக வீரராக களமிறங்கிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் நடராஜன் படைத்துள்ளார்.

மேலும் படிக்க: ஜல்லிக்கட்டு டூ வழுக்கு மரம் ஏறுதல் – பொங்கலும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் !