தமிழக வீரர் பிரஜ்னேஷிற்கு சாதகமான அறிவிப்பினை வெளியிட்ட டென்னிஸ் கவுன்சில்

Update: 2020-07-11 06:46 GMT

சமிபகாலமாக டென்னிஸ் களத்தில் விளையாட அனுமதியில்லாததால் வீட்டினுள்ளேயே முடிங்கியிருந்த இந்தியாவின் முன்னனி வீரரான பிரஜ்னேஷ் குன்னேஸ்வரனுக்கு ஒரு நற்செய்தியாக வந்துள்ளது உலக டென்னிஸ் சம்மேளனத்தின் புதிய அறிவிப்பு. ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் தகுதிபெறும் புள்ளிகளை சேர்க்கும் கால அவகாசம் வழக்கமாக போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக கடந்த ஒரு வருடத்தில் நடந்த போட்டிகளில், ஒரு வீரரின் சிறந்த 18 போட்டி முடிவுகள் கணக்கெடுக்கப்படும். ஆனால் தற்போது அது 18 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மார்ச் 2019 முதல் டிசம்பர் 2020 வரை நடந்த போட்டிகளின் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும். இது நிச்சயமாக பிரஜ்னேஷிற்கு சாதகமான முடிவாகும்.

கடந்த ஏப்ரல் 2019ல் தான் அவர் உலகத் தரவரிசையில் 75 ஆவது ரேங்கிங்கில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே அவரது கரியரில் அதிகப்படியான ரேங்கிங்கும் ஆகும். இந்த காலகட்டத்தில் பிரஜ்னேஷ் பல தொடர்களில் சிறப்பான ஆட்டத்தினை வெளிபடுத்தியிருந்தார். இந்த புதிய அறிவிப்பின் மூலமாக அந்த புள்ளிகளினை தக்கவைத்து கொள்ள முடியும். ஆனால் இதில் முக்கிய அம்சமாக போட்டிகளுக்கான காலம் 18 மாதங்களாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரே தகுதிநிலையில் உள்ள இரண்டு தொடர்களின் புள்ளிகளை சேர்க்க முடியாது. இரண்டு போட்டிகளில் சிறந்த ஒன்றின் புள்ளிகள் மட்டுமே கணக்கெடுத்து கொள்ளப்படும்.

கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யு. எஸ். ஓபன் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டள்ளது. இது ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிபுள்ளிகளை சேகரிப்பதில் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய நிலைமை சீரானால் இந்த தொடரில் தான் நிச்சயமாக பங்கேற்பேன் என பிரஜ்னேஷ் ஒலிம்பிக் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.