இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஶ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு கடினமான தொடக்க சுற்று

Update: 2020-03-10 12:01 GMT

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நாளை முதல் பிர்மிங்ஹம்மில் தொடங்க உள்ளது. இந்தத் தொடரிலிருந்து கொரோனா வைரஸ் காரணமாக பிரனாய், சமீர் வர்மா, சவுரவ் வர்மா, சிராக் செட்டி, சுமித் ரெட்டி, மனு ஆட்ரி ஆகிய வீரர்கள் விலகியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா சார்பில் இத் தொடரில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஶ்ரீகாந்த், சாய் பிரணீத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் சாய்னா நேவால் மற்றும் ஶ்ரீகாந்த் ஆகிய இருவருக்கும் கடினமான முதல் சுற்றுப் போட்டிகள் அமைந்துள்ளன.

இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று போட்டியில் 3ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகேன் யமாகுச்சியை எதிர்கொள்கிறார். யமாகுச்சி சரியான ஃபார்மில் இல்லாததால் சாய்னா அவரை தோற்கடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அவர் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றால் இரண்டாவது சுற்றில் ஜப்பானின் சயகா டக்காயிஷியை எதிர்கொள்கிறார். அதன்பின்னர் காலிறுதி சுற்றில் கரோலினா மெரினை எதிர்கொள்வார்.

இதனால் அவர் மிகவும் கடினமான சுற்றுகளை சந்திக்க உள்ளார். அதேபோல இந்திய வீரர் ஶ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கை எதிர்கொள்கிறார். அதன்பின்னர் அவரும் கடினமான போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளார். எனவே இவருக்கும் இந்தத் தொடரில் மிகுந்த சவால் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் ஶ்ரீகாந்த் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற தீவிரமான முயற்சியில் உள்ளனர். இவர்கள் இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப் பெற வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் டோக்கியோ தொடருக்கான சர்வதேச வீரர்கள் பட்டியலில் டாப் 16 இடங்களுக்குள் வர வேண்டும்.

தற்போது சாய்னா நேவால் 22ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல ஶ்ரீகாந்த் ஆடவர் பிரிவில் 21ஆவது இடத்தில் உள்ளார். எனவே இவர்கள் இருவரும் டாப் 16 இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் இனி வரும் பேட்மிண்டன் தொடர்களில் சிறப்பாக விளையாட வேண்டும். ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சில பேட்மிண்டன் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் இருவரும் கால அவகாசம் மிகவும் குறைந்துள்ளது.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் வெற்றிப் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு 12ஆயிரம் தரவரிசை புள்ளிகள் கிடைக்கும். ஆகவே இந்தத் தொடர் சாய்னா நேவால் மற்றும் ஶ்ரீகாந்த் ஆகியோரின் ஒலிம்பிக் தகுதி மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

மேலும் இத் தொடரில் பங்கேற்று உள்ள பி.வி.சிந்து சற்று எளிதான பிரிவில் இடம்பெற்றுள்ளார். இதனால் அவர் காலிறுதி வரை எளிதில் வெற்றிப் பெற்று முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடவர் பிரிவில் சாய் பிரணீத் மற்றும் லக்‌ஷ்யா சென் ஆகிய இருவருக்கும் முதல் சுற்று போட்டிகள் எளிதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.