கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியாவில் நடக்கவிருந்த அனைத்து டென்னிஸ் போட்டிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளது

Update: 2020-03-13 14:29 GMT

உலகெங்கும் பல விளையாட்டு தொடர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மற்றொரு அறிவிப்பாக அடுத்த ஒரு மாதத்திற்கு அனைத்து டென்னிஸ் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய மகளிர் டென்னிஸ் அணி விளையாட இருந்த ஃபெட் கோப்பையின் ப்ளே ஆஃப்ஸ் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய டென்னிஸ் அனைப்பான ஏ ஐ டி ஏ வும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நடக்கவிருந்த அனைத்து விதமான டென்னிஸ் தொடர்களும் அடுத்த அறிவிப்பு வரும்வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இதனால் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஃபியுச்சர்ஸ் லெவல் டென்னிஸ் போட்டிகளும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் உலகெங்கிலும் பல விளையாட்டு தொடர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான இங்கிலாந்தின் கால்பந்தின் தொடரும் ஏப்ரல் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்க கால்பந்து தொடர்களும் நிறுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் இந்த தொற்று பரவி வருவதால் அனைவரும் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்த முக்கியமான சமயத்தில் அனைவரின் உடல்நலம் கருதி விளையாட்டு தொடர்களை ஒத்திவைத்ததே சரியான முடிவாகும்.