இந்தியாவின் உள்ளூர் போட்டிகளான ரஞ்சி டிராபி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் கர்நாடகா அணியும் பரோடா அணியும் மோதும் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
இந்தப் போட்டியின் வர்ணனையின் போது வர்ணனையாளர் ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்தப் போட்டிக்கு சுஷில் தோஷி என்பவர் வர்ணணை செய்து கொண்டு இருந்தார். பரோடா அணியின் ஆட்டத்தின் 7ஆவது ஓவரின் போது வர்ணனையில் இருந்த ஒருவர், "முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்தியில் வர்ணனை கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அத்துடன் அவர் இந்தி மொழியிலேயே ஆட்டத்தின் நுனுக்கங்களை கற்றுத் தருவதும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது" எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்த மற்றொரு வர்ணனையாளர், "இந்தியர் அனைவருக்கும் கட்டாயமாக இந்தி தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தி நமது தாய்மொழி. அதைவிட பெரிய மொழி வேறு எதுவும் கிடையாது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் யாராவது நான் இந்தி பேச வேண்டும் எனக் கேட்டால் எனக்கு மிகவும் கோபம் வரும். நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள் ஆகவே நீங்கள் இந்தியாவின் தாய்மொழியான இந்தியை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் " எனக் கூறினார்.
இவரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் மிகவும் எதிர்ப்பை பெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சிலர் பதிவிட்டு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பலர் இந்தியாவிற்கு என்று தாய் மொழி என்று ஒன்று கிடையாது. பிசிசிஐ கிரிக்கெட் மூலம் இந்தியை திணிக்க விரும்புகிறதா என்ற கேள்வியையும் பலர் எழுப்பியுள்ளனர்.
இலங்கையில் நிடாஸ் கோப்பை தொடரின் போது இந்திய அணியில் இடம்பெற்று இருந்த தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் களத்தில் தமிழில் பேசியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது முரளி விஜய் மற்றும் கே.எல்.ராகுல் ஒன்றாக விளையாடிய போது இருவரும் தமிழில் தான் பேசிக் கொண்டனர்.
அத்துடன் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் கர்நாடகா வீரர்கள் மணீஷ் பாண்டே மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்து விளையாடினர். அப்போது இருவரும் கன்னடத்தில் பேசுக் கொண்டது ஸ்டேம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகி இருந்தது.
இப்படி கிரிக்கெட் வீரர்களே களத்தில் இந்த மொழியில் தான் பேச வேண்டும் என்ற கட்டுபாடு இல்லாத நிலையில் வர்ணனையாளர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.