இந்திய பாராலிம்பிக் வீரர்கள் வரிசையில் தங்கவேலு மாரியப்பன் மிகவும் பிரபலமானவர். இவரை போல் பாராலிம்பிக் உலகில் சாதித்து வரும் மற்றொரு தமிழ்நாட்டு வீரர் தான் ஆனந்த் குணசேகரன். இவர் எந்த பாராலிம்பிக் விளையாட்டில் என்ன சாதித்து வருகிறார்?
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் குணசேகரன். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குடும்ப வறுமையை அறிந்து இவர் தினமும் காலையில் நியூஸ் பேப்பர் போடும் பணிக்கு சென்று வந்தார். இதற்காக தினமும் காலை 3.30 மணிக்கு எழுந்து பணி செய்துவிட்டு பள்ளிக்குச் சென்றார். அதன்பின்னர் மாலை நேரங்களில் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்துள்ளார்.
அப்போது இவருக்கு இயல்பாகவே ஓடும் திறமை இருந்ததை இவரின் நண்பர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தன்னுடைய பள்ளி சார்பில் ஓட்டப் பந்தையங்களில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல ஆரம்பித்தார். அதன்பின்னர் தேசிய அளவிலும் தமிழ்நாடு சார்பாக ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் அளவில் பதக்கங்களை வெல்ல ஆரம்பித்தார்.
தனது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இவர் ராணுவத்தில் சேர விரும்பினார். இதற்காக விண்ணப்பித்து ராணுவத்தில் சுபேதராக இவர் பணியில் சேர்ந்தார். ராணுவத்திலும் இவருடைய ஓட்டப்பந்தைய பயணம் தொடர்ந்தது. அங்கும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு இவர் தடகள போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் குப்வரா மாவட்டத்தில் பணியாற்றும் போது ஒரு வெடி விபத்து ஏற்பட்டது. அந்தச் சமயம் ரோந்து பணியில் ஈடுபட்டு திரும்பிய இவர் வெடி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் இவர் உயிர் தப்பியிருந்தாலும் இவருடைய இடது கால் பெரும் பாதிப்பு அடைந்தது. இதனால் இவருடைய இடது கால் எடுக்கும் நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் இவர் ஆஸ்கார் பிஸ்ட்ரியஸ் என்ற பாராலிம்பிக் வீரரின் கதையை மருத்துவமனையில் இருந்தப் போது படித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவரும் காலில் பிளேட் பொருத்தி ஓடும் முயற்சியில் ஈடுபட்டார். முதலில் இவருக்கு தேவையான நிதியுதவி கிடைக்காததால் சற்று கவலை அடைந்தார். பின்னர் தனது சக ராணுவ வீரர்களின் உதவியுடன் பிளேட் வாங்கி போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
2️⃣ GOLD MEDALS 🥇IN 1️⃣DAY!
— The Bridge (@TheBridge_IN) October 22, 2019
Anandan Gunasekaran does an encore to bring home the second🥇medal for India 🇮🇳 at the World Military Games 2019 after clocking 53.35 in the 400m IT1 event.
But do you know his story? Watch 👇 pic.twitter.com/AihIQzNQKS
2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் 200 மீட்டர் பாராலிம்பிக் ஓட்டப்பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் பிரிவில் வெண்கலமும் வென்றார். அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர்,400 மீட்டர் என அனைத்து பிரிவிலும் இவர் தங்கம் வென்று அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து வரும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்லும் முனைப்பில் இவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவரின் நோக்கம் நிறைவேறி பதக்கம் வென்று சாதிப்பார் என்று நாம் வாழ்த்துவோம்.
மேலும் படிக்க: தனது கிராமத்திற்கு ரயில் நிலையம் வாங்கி தந்த இந்தியாவின் முதல் பளுத் தூக்குதல் சாம்பியன் ஏகாம்பரம்!